Friday 3 June 2016

சதுரகிரி மலை பயணம்: 3

தோன்றியது:
இருட்டில் நடக்கும் போது நம்மிடம் உள்ள வெளிச்சத்தில் நம் பாதையை தவிர மற்ற இடங்கள் தெரியாது, எவ்வளவு தூரம் நடந்து வந்தோம், எவ்வளவு தூரம் போகப்போகிறோம் என்பதும் தெரியாது, அதை கண்களாலும் அளக்க முடியாது, இன்னும் தூரம் போக வேண்டுமே என்ற மலைப்பும் இருக்காது. நம்மிடம் உள்ள சிறிய வெளிச்சத்தைகொண்டு, தற்போதைக்கு அடுத்த அடி எடுத்து வைத்து நம் முன் உள்ள பாதையை கடக்க முயல்வோம். 
இப்படி சென்றால் பயண களைப்பும் தெரியாது, பயணித்த தூரமும் தெரியாது. இந்த விஷயத்தை நம் வாழ்க்கையிலும் பயன்படுத்தலாம், வாழ்க்கையை எப்படி வாழப்போகிறோம் என்று பயப்படுவதை விடுத்து இந்த நொடியை, இந்த தருணத்தை, இந்த நாளை சரியாக வாழ்ந்தால் போதும் நாளையும் நாளை மறுநாளும் தானாகவே நன்றாக அமைந்துவிடும்.

(Like madam Oprah Winfrey said "What is the next right move? What is the next right move? and then, from that space, make the next right move and the next right move."). 

எதிர்கால கனவுகளும், கடந்த கால நினைவுகளும் நமது நிகழ்காலத்தை நிரப்பக்கூடாது, நிகழ்காலத்தில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும், பின் நம் வாழ்க்கை போவதே இனிமையாகிவிடும். மேற்சொன்னதை போல இரவு மேலே ஏறியதையும்,  இன்று காலை 4 முதல் 6.30 மணி வரை கீழே இறங்கியதையும் விட 6.30 மணியிலிருந்து 8 மணி வரை அடிவாரம் இறங்கி சென்றது அதிக நேரமும் அதிக சிரமுமாக இருந்தது. ஏனெனில் கவனம் சிதறிவிட்டது, எவ்வளவு தூரம் வந்தோம் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்று கண்களால் அளக்க ஆரம்பித்தது, வேடிக்கை பார்த்துகொண்டு சென்றது ஆகிய செயல்களால் இலக்கு மறைந்து, எண்ண சிதறல்கள் ஏற்பட்டு சக்தி விரயமாகி சோர்வு ஏற்பட்டதே முக்கிய காரணம்.

(http://kyrgyzstantraveller1.blogspot.in/2014/06/chaturagiri.html)

ஊர் திரும்பல்: 7.45 மணிபோல மேலே படத்தில் உள்ள ராஜதங்ககாளியம்மன்  கோவிலை அடைந்து அன்னதானத்தில் சாப்பிட்டுவிட்டு, நேற்று குளித்த அருவியில் கை கால் கழுவி உடைமாற்றி அடிவாரத்தை அடைந்தோம். அடிவாரத்தில் மூலிகை சூப் குடித்து வத்திராயிறுப்பு  (வத்ராப் ) வருவதற்கு காலை 9 மணி ஆயிற்று. கோவிலிலும், காலையில் இறங்கும் போதும் பார்த்ததில் ஆண்களுக்கு இணையாக எண்ணிக்கையில் பெண்களும் அதிகளவில் கோவிலுக்கு வருகின்றனர் ஆச்சரியமான விஷயம்தான். தற்போது கிருஷ்ணன்கோவிலிலிருந்து மதுரைக்கோ திருச்சிக்கோ வண்டி கிடைக்காது, எனவே நாங்கள் மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றோம், எதிர்பாராத விதமாக திருச்சிக்கே நேர் வண்டி கிடைத்தது, 70 ரூபாய் கட்டணம், 10 மணிக்கு ஏறி 2.45 க்கு திருச்சி வந்தோம்.

மதுரையிலிருந்து திருச்சிக்கு புறவழி சாலை வழியாக 2.05 மணிநேரத்தில் பேரூந்து வந்துவிட்டது. பின் அவர்களிருவரையும் விடுத்து சத்திரம் பேரூந்து நிலையம் வந்து வீடு வர மாலை 5.10 ஆயிற்று. மலை ஏறி இறங்கியபோது களைப்போ உடல்வலியோ துளியும் இல்லை ஆனால் இந்த 8 மணிநேர பேரூந்து பயணம் உடலில் களைப்பை ஏற்படுத்திவிட்டது. இவ்வாறாக சதுரகிரி பயணம் எதிர்பார்த்ததை விட நல்ல படியாக முடிவுற்றது. அடுத்து அலஹாபாத்தில் நடந்த கும்பமேளா பயண கட்டுரையில் சந்திப்போம்.......

(http://www.aanmigakkadal.com/2009/11/sathuragiri.html)


சில ஆச்சர்யமான அனுபவங்கள்:

1) திருச்சியில் வாங்கிய புத்தகத்தை அடுத்த நாள் வீட்டில் வந்து படிக்க, அதில் முதல் அத்தியாயத்தில் கொடுத்திருந்த செய்தி என்னை ஆச்சர்யத்திலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது, இதுதான் அது
"புதிதாக செல்லும் அன்பர்களை பத்திரமாக மலை ஏற்றி தரிசனம் பெறச்செய்து, ஊர்வரை அழைத்து செல்லும் பொறுப்பை அந்த மகாலிங்கமே ஏற்றுக்கொள்கிறார் "
என்ன ஒரு உண்மை, என்னோடு வந்தவர்கள் என்னை பத்திரமாக மலை ஏற்றி, தரிசனம் செய்ய வைத்து திருச்சி வரை என்னுடன் வந்தார்கள்.

2) திங்கள்கிழமை அஸ்ஸாம் கிளம்ப வேண்டும் காலை 8 மணிக்கு விமானம், ஞாயிறன்று நல்ல ஜலதோஷம். திங்கள் காலை பெருங்களத்தூரில் நண்பர்  செந்தில்முருகன் வீட்டில் இறங்கினேன். திங்கள் கிழமை எப்போதும் தலைக்கு குளித்து விட்டு முடிந்தால் விரதமிருப்பேன் அல்லது கிடையாது. (அம்மா வழி தாத்தாவின் பழக்கம், சிவ பக்தர்) அங்கு சுடு தண்ணி கிடையாது, குளிர்ந்த நீரில் தான் குளித்து கிளம்ப வேண்டும், ஜலதோஷம், இரவு பயணத்தால் மூக்கடைப்பு வேறு. மகாலிங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பச்சை தண்ணீர் ஊற்றி அதிகாலையில் குளித்தேன். விமானத்தில் குளிர்சாதனம், ஒரு fruit juice வேறு,. அஸ்ஸாம் வந்த பிறகு ஒரு தும்மல், இருமல், காய்ச்சல், தலைவலி ஒன்றுமில்லை. கடந்த வருடம் இது போல் விமானத்தில் ஜலதோஷத்துடன் வந்து 2 வாரம் கஷட்டப்பட்ட அனுபவம் உண்டு.

3) பெருங்களத்தூரில் வீட்டிலிருந்து railway station வந்தாச்சு இப்போது flight ticket காணோம். வீட்டில் விட்டேனா? வழியில் விழுந்ததா? ஒன்றுமே தெரியாது. பிறகென்ன மறுபடியும் மகாலிங்க சுவாமிகளை நினைத்துக்கொண்டு வீடு வரை சென்று வர எண்ணி ஒரு 50 அடி தூரம் நடந்திருப்பேன், கரண்ட் கம்பியில் அமர்ந்திருந்த காகம் ஒன்று எச்சம் போடவே (எதேச்சையாக  மேலே பார்த்த போது தெரிந்தது) சற்று (5 வினாடி) தாமதித்து சுற்றும் முற்றும் பார்த்து செல்ல எண்ணிய போது  கீழே பார்த்தால் எனது ticket அங்கு கிடக்கிறது, இதை என்னவென்று சொல்ல? அவன் கருணையின்றி. போகும் வழியில் pantன் பின் பையில் வைத்திருந்த  எனது flight ticket கீழே விழுந்து விட்டது போல. எங்கு வைத்தோமென்றே  மறந்த எனக்கு சரியான தருணத்தில் கிடைத்தது அதிசயம் தானே.

4) விமானம் 8.10 மணிக்கு, உள்நாட்டு பயணம் என்றால் 45 நிமிடங்களுக்கு முன்பாக சென்று check-in செய்ய வேண்டும் , இல்லையென்றால் பயணம் செய்ய முடியாது. இது தெரியாமல் திரிசூலம் நிலையத்தில் செந்திலுடன் சாப்பிட்டு கிளம்ப நேரமாகிவிட்டது அதாவது மணி 7.30. 7.25 க்கு நான் check-in செய்திருக்க வேண்டும் நான் சென்ற போது  7.35. அதனால் check-in counterல் இருந்தவர் "நீங்கள் 10 நிமிடம் தாமதமானதால் விமானத்தை தவறவிட்டுவிட்டீர்கள், அடுத்த விமானத்தில்தான் உங்களால் செல்ல முடியும் அதற்க்கு புதிய பயணச்சீட்டு எடுக்க வேண்டும், பழைய பயணச்சீட்டின் பணமும் திருப்பி தரமாட்டோம்" என்று சொல்லிவிட்டார்.

சிறிது அதிர்ந்து விட்டேன், ஆங்கிலம் வரமாட்டேன் என்கிறது தமிழில்தான் பேச வருகிறது, ஒரு பணி  பெண்ணிடம் இதைப்பற்றி சொன்னேன் அவரும் தமிழ்நாடுதான் போல சற்று பொறுங்கள் என்று மேல் அதிகாரியை சந்திக்கசென்றார் . என்னடா காளிபட்டியானுக்கு வந்த சோதனை என்று மறுபடியும் மகாலிங்க ச்வாமியையே துணைக்கு அழைத்தேன். திரும்பி வந்த பணிப்பெண் "உங்களை சிறப்பு அனுமதியில் அனுப்புகிறோம் மற்றொரு முறை இவ்வாறு வராதீர்கள்" என்று சொல்லி நேராக விமான கதவு வரை அழைத்து வந்து விட்டார். இதைவிட ஒரு விஷயம் என்னவெனில் அஸ்ஸாம் வந்த பிறகு தெரிந்து கொண்டது, என்னை போலவே ஞாயிறன்று தாமதமாக வந்த நண்பர் ஒருவரை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்களாம். இதையெல்லாம் என்னவென்று சொல்ல.

யாராயினும் சரி, எந்த பெயரையாயினும்  (கடவுள்)  சரி முழு மனதோடு, முழு நம்பிக்கையோடு வேண்டி சரணடைந்தால் அதிசயங்கள் நடந்துகொண்டே இருக்கும். 

"Whatever you believe , you will find that you are correct. The universe has a way of  presenting to you exactly what you believe"   By Anita Moorjani


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...